இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்  பச்சோந்தி

 

ஓணான், பல்லி, பாம்பு இனத்தைச் சேர்ந்த பச்சோந்தி ஒரு வினோதப் பிராணி.  இதைப்  பற்றிய சில தகவல்கள் இதோ. புத்தகத்தில் படித்தவை அல்ல.  நேரில் கண்டறிந்தவை.

 

பச்சோந்தி நிறம் மாறும் என்பது உண்மை.  ஆனால் நினைத்தபடி எல்லாம் அது இருக்கும் சுற்றுப் புறத்திற்கேற்ப நிறம் மாறும் என்பது தவறு.  சாதாரணமாக பச்சை நிறத்திலே சில சிறு கருப்புக் கட்டங்களுடன் காணப்படும் இது கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை நல்ல பச்சை நிறத்திலிருந்து, கரும் பச்சையாகவொ அல்லது வெளிர் பச்சையாகவோ மாறுகிறது.  அதன் மீதுள்ள கருப்பு புள்ளிகளோ கட்டங்களோ சற்றே மாறுகின்றன.  நிற மாற்றம் அதன் மன நிலையையும் தன் சகாக்களுடன் எண்ணப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதற்குமே.

 

 

ஆமை வேகத்தில் நகரும் பச்சோந்தி. இதன் உடலில் உள்ள கட்டங்கள் சற்றே மாறி இருப்பதை அடுத்த படத்தில் பாருங்கள்.

 

நாலா பக்கமும் உருளும் கண் விழிகள்

 

பச்சோந்திகளிடம் பல வியக்கத் தக்க விஷயங்கள் உள்ளன. அவை வருமாறு.

 

உருவத்தில் ஓணான் மாதிரித் தோன்றினாலும் இது ஓணான் போல வேகமாக ஓடக்கூடிய ஒன்றல்ல.  முன்னும் பின்னுமாக ஆடி ஆடி நிதானமாக ஒரு ஒரு அடியாக காலை முன் வைத்து நகரும்.

 

பச்சோந்திக்கு முதல் எதிரி காகம்.  பச்சோந்தியைக் கண்டால் விடாது.  கொன்று தின்றுவிடும்.  காகத்திடம் இருந்து தப்புவதற்குத் தான் இவை இருக்கும் தாவரங்களின் பச்சை நிறத்தையே இதற்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். 

 

பச்சோந்தியின் கண்கள் இரெண்டும் தனித் தனியே இயங்கக் கூடியவை.  ஒரு கண் முன்பும் பார்க்கும் போது மற்றொன்றால் அது பின் புறம் பார்க்கும்.  அவ்வாறு பார்ப்பதை மாற்றிக் கொண்டே இருக்கும்.  கண்கள் ஒரு உருண்டையான தோல் பைக்குள் இருக்கும் ஒரு மில்லிமீடர் அளவிலான சிறு ஓட்டை கொண்டதாக.  கண்களைத் தனித் தனியாக எல்லாப் பக்கமும் சுற்ற வல்லது பச்சோந்தி.

 

பச்சோந்தியின் வால் அதற்கு ஐந்தாவது கால்.  ஒரு குச்சியில் இருந்து மற்றொன்றுக்குத் தாவும் போது முதலில் உடலை கவிழ்த்து வைத்த ஆங்கில எழுத்து யூ போன்று வளைத்துக் கொண்டு முன்னங் கால்களைக் கொண்டு புதிய குச்சியைப் பிடிக்கப் பார்க்கும். எட்டவில்லை என்றால் முதுகை நிமிர்த்தி உடலை நீட்டி முன்னே உள்ள குச்சியைப் பிடிக்கப் பார்க்கும்.  அப்போதும் எட்ட வில்லை என்றால் தனது வாலை இருக்கும் குச்சியில் விஷ்ணுச் சக்கரம் போன்று சுருட்டிக் கொண்டு நான்கு கால்களையும் விட்டுவிட்டு எட்டிப் பார்க்கும்.  மீண்டும் எட்ட முடிய வில்லையா?  விஷ்ணுச் சக்கரத்தினை மெதுவாகப் பிரித்து குச்சியை எட்டிப் பிடிக்கப் பார்க்கும்.  அப்பொதுகூட எட்ட வில்லையா?  பேசாமல் வாலை மீண்டும் விஷ்ணுச் சக்கரமாக சுருட்டி உடலை பின்னே இழுத்து வந்த வழியெ திரும்பி விடும்.

 

பச்சோந்தியின் நாக்கு கிட்டத் தட்ட அதன் உடல் நீளத்திற்கே ஆனது.  வேண்டும்போது நீட்டி முன்பக்கமாக சாட்டை போல வேளியே மின்னல் வேகத்தில் தள்ளி பசை கொண்ட நுனி நாக்கால்  அதற்கு மிகவும் பிடித்த உணவான ஈ மற்றும் சிறு புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும்.  நாக்கு ஒட்டிக் கொண்டிருப்பதும் அடி வாயில் அல்ல.  நுனி வாயில்.

 

பச்சோந்தியின் முன்னங் கால்களில் வெளிப்புறம் இரெண்டும் உட்புறம் மூன்றுமாக ஊள்ள நகங்கள் பின்னங் கால்களில் வெளிப் புறம் மூன்றும் உட்புறம் இரெண்டுமாக இருக்கும்.

 

இப்படிப் பல வியக்கத் தக்க விநோதங்களை பச்சோந்திக்கு அதன் வாழ்க்கைக்கேற்ப அளித்திருக்கிறான் ஆண்டவன்.

 

பச்சோந்தி நல்ல பாம்பு போன்று விஷம்கொண்டது என்பர் சிலர்.  இது முற்றிலும் தவறான ஒரு கருத்து.  கொல்லப்படவிருந்த ஒரு பச்சோந்தியை காப்பாற்றும் பொருட்டு அதன் வாய்க்குள் என் விரலை விட்டிருக்கிறேன்.  அதுவும் நன்றாகக் கடித்தது.  ஆனால் இன்றும் நான் உயிருடன் தான் இருக்கிறேன்.  அந்தப்  பச்சோந்தியும் அன்று பிழைத்தது.

           

 

  விஷ்ணுச் சக்கர வாலையும் கால் விரல்களையும் கண் பின்புறம் பார்ப்பதையும் பாருங்கள்.

(http://photos.neuralnetworks.in/066.JPG)

 

பச்சோந்தி என்றால் பச்சை நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும்

என்பதில்லை.  வேறு நிறங்களிலும் இருக்கலாம். அடுத்து வரும் படத்தைப் பாருங்கள்.

 

 

கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ணப் பச்சோந்தி

(http://lifeboat.com/images/chameleon.jpg)   

 

 

இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.

 

                                            நடராஜன் கல்பட்டு

 

 

(கருப்பு வெள்ளை படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)